| | 5 - கருத்துரை

சொந்த வீடு - தொடர் பதிவு - 1



"அப்பா.. இன்னிக்கு கார்த்தால ஒருத்தன் போன் பண்ணிருந்தான்பா. கோட்டிகேரி பக்கத்துல ஒரு அபார்ட்மென்ட் இருக்குன்னு சொன்னான். எனக்கு என்னவோ அது நல்ல ஏரியானு தோணுது. சும்மா போய் பாத்துட்டு வரலாமா ?"

"அட போடா. நாமளும் சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமையானா இதே பொழப்பா அலையறோம். ஒரு அபார்ட்மென்ட்டாவது நல்லா இருக்கா, ஹால்லயே பாத்ரூம்.. இல்லைனா கிட்சன் ரொம்ப சின்னது, எல்லாம் சரியா இருந்தா, இந்த பாங்க்லதான் லோன் வாங்கனும்னு சொல்றான். அவன் சொல்ற பாங்க்ல லோன் ரேட் ரொம்ப அதிகமா இருக்கு. ஏற்கனவே இங்க வாய்க்கும் வயிதுக்கும் இடிக்குது. இதுல லோன் வேற போட்டாச்சுன்னா, கடன் வாங்குனா கூட பத்தாது. நம்மளால எல்லாம் பெங்களூர்ல வீடு வாங்க முடியாது. நீ வேற வேலை இருந்தா போய் பாரு", என்ற அப்பாவின் கவலையிலும் ஒரு ஞாயம் இருந்தது. எல்லாருக்கும் புடிச்சாமதிரி ஒரு வீடு அமையறது அவ்வளவு ஈஸி இல்ல. அதுவும் அபார்ட்மென்ட் வாங்கனும்ன எவ்வளவு விஷயம் பாக்கவேண்டியிருக்கு. 

"அப்படி சொல்லாதப்பா. என்னதான் கட்டிருக்கான்னு போய் பாத்துட்டு வந்துரலாம். நீ சீக்கிரம் போய் ரெடியாகு. நான் போய் வண்டிய வெளில எடுக்கறேன்." என்று கூறிவிட்டு அம்மாவை பார்த்து,
"அம்மா வரியா?", என்றேன். இல்லை என்றுதான் சொல்வாள் என்று தெரிந்தும், நான் அம்மாவை கூப்பிடுவேன். ஏனோ அது எனக்கு பழகிப் போய்விட்டது.

"இல்லடா. நீயும் அப்பாவும் போயிட்டு வாங்க. உன்னக்கு புடிச்சிருந்தா அப்பறமா நான் வரேன்". ஆமாம், அம்மாவுக்கு புடிச்சிருந்தா அது எனக்கு புடிச்சிருக்கும். அது மாதிரி தான் அம்மாவுக்கும்.

"சரிம்மா. போய்ட்டுவறோம்". என்று வண்டியை எடுக்க, அது, முதல் கியர் விழுந்ததும் நின்றுவிட்டது. எப்படியோ சமாளித்து காரை ஓட்டிக்கொண்டு ,அந்த அட்ரஸில் போய் நிறுத்தினேன்.

"பன்னி சார். கார் அல்லி பார்க் மாடிபிடி". வெளியே நின்றிருந்த செக்யூரிட்டி பேசிய கன்னடம் எனக்கு ஓரளவுக்கு புரிந்ததால்,அவன் சொன்ன இடத்தில காரை பார்க் செய்துவிட்டு வந்தேன்.

" சார், இல்லி ஒந்து என்ட்ரி மாடி சார்.", மறுபடியும் கன்னடம். என்ட்ரி என்ற வார்த்தை கேட்டவுடன், ஓரளவு புரிந்தது.

"முனியப்பா இதாரா ?", எனக்கு தெரிந்த கன்னட வார்த்தையில் அந்த செக்யூரிட்டியிடம் கேட்டேன், அவன் கொடுத்த புத்தகத்தில் எழுதிக்கொண்டே.

" மேல்கடே இதாரே சார். நீவு இல்லி ஓகி", என்று அவன் காட்டிய படிக்கட்டில் ஏறிக்கொண்டே, "பாத்து வாப்பா" என்று என் அப்பாவை எச்சரித்தேன். கட்டி முடிக்கப்படாத கட்டிடம் என்பதால் எங்கும் கம்பிகள் சிதறி கிடந்தன. ஒரு வழியாய் மூன்று மாடிகள் ஏறி, மூச்சு வாங்க நின்றோம்.

போனில் யாரிடமோ பேசிகொண்டிருந்த முனியப்பா எங்களை பார்த்து, " ஒந்து நிமிஷா சார், பர்தினி" , என்றான்.

" பரவால்ல சார். நாங்க வெயிட் பண்றோம்" , என்று சொல்லிவிட்டு, அந்த அபார்ட்மென்ட் வீட்டின் கதவுக்கான பகுதியை பார்க்க சென்றேன்.

" சார், கன்னடா பருத்தா", என்று கேட்டவனிடம் , " இல்ல சார், நாங்க தமிழ்" என்று கூற, அவன் " பரவாகில்லா சார், எனக்கு கொஞ்சம் தமில் வருது" என்றான். வந்த தமிழை பார்த்து மெய் சிலிர்த்து போனேன்.

" இங்கே வாங்கோ சார். இந்த லாஸ்ட் பிளாட் தான்" என்று, எங்களுக்காக அவன் பார்த்து வைத்திருந்த அபார்ட்மென்ட் வீட்டை காண்பித்தான்.

" சார், நீவு ஹெசுறு ஏன்னு", என்றவனிடம் ஒன்றும் புரியாமல் நான் விழிக்க, அவன் செந்தமிழில் என்னிடம் " பேரு சொல்லுங்க சார்" என்றான்.

காற்றுள்ள போதே தூற்றிக்கொள், என்பது போல், இப்படி யாரவது கேட்டல், உடனே பர்சில் இருந்து விசிடிங் கார்டை எடுத்து கொடுத்துவிடுவேன். 

நீட்டிய கார்டை வாங்கி பாக்கெட்டில் போட்டுகொண்டு, " உங்க கம்பெனிலே எரடு பேரு இங்க பிளாட் புக் பண்ணிகிராங்கோ சார்", என்று ஒரு கதையை சொன்னான். 

சரி என்பது போல் மண்டையை ஆட்டிவிட்டு, " உள்ள பாக்கலாமா" என்றேன்.

"பன்னி சார். சக்கத் பிளாட் சார், நிம்கி தும்பா இஷ்டாகுத்தே சார்" என்று கன்னடத்தில் பேச, நாங்கள் அவன் பின்னல் போனோம். 

சார் சார் என்று அவன் குழைவதை பார்த்து எனக்கு சிறியதாய்  ஒரு சந்தேகம் தோன்றியது. என்னதான் இருக்குன்னு பாப்போம் என்பது போல் அப்பா கண் அசைக்க, சொந்தமில்லாத வீட்டுக்குள் வலது காலை எடுத்து வைத்து நுழைந்தேன்.

தொடரும் ...



| | 1 - கருத்துரை

வாழ்கை போட்டியில்தான் தொடங்கும்...



போட்டியில் தொடங்கும் வாழ்க்கை
ஜெயிப்பது மட்டும் குறிக்கோள்
தேவையென்றால் பறித்துக்கொள்
சொல்லிதரப்படாத பாடம்
நல்லதுக்காக பொய் சொல்
நீ செய்வது எல்லாம் நல்லவை
முதல் காதல் மறக்காது
இரண்டாம் காதலியை மறந்துவிடு
சீக்கிரம் மணந்துகொள்
காதல் எதிரியானால் தோற்றுப்போவாய்
சொல்வதற்கெல்லாம் தலையாட்டு
புதிய பழக்கங்கள் வழக்கமாகும்
கிழக்கில் தான் வெளிச்சம்
உனக்கு அது ஒன்றுதான் திசை
கையில் கிடைக்கும்வரை காத்திரு
கிடைப்பது உனக்காக தீர்மானிக்கப்பட்டது
சில சமயம் நீ ராஜா
யாரிடம் தோற்றுப்போனாலும் ராணி உனக்குத்தான்
பழையது வேண்டாம் உனக்கு
நீ விரும்பும் பழையது
எப்போதோ புதியதாக்கப்பட்டுவிட்டது
இன்று இரவை என்றும் நினை
நாளை பகல் உனக்கு இல்லாமல் போகலாம்
தோற்றுவிட்டோம் என்று சோர்ந்துவிடதே
மீண்டும் உன் வாழ்கை போட்டியில்தான் தொடங்கும்...

| | 1 - கருத்துரை

காற்று வரும்



துருப்பிடித்த ஜன்னல் கம்பிகளை
திரையிட்டு மறைத்து வைத்த போது
நீண்டு வளர்ந்த நகம் ஒன்று வருடியதால்
கிழிந்த கண்ணாடிச் சேலையில் விழுந்த
ஓட்டை ஊடகமாய் மாறிக்கொண்டு
உலக வெப்பமயமாக்கலுக்கு எனக்கான பங்களிப்பை
உலகிற்கு கொண்டுசென்ற நேரத்தில்
மெய் சிலிர்த்து உணர்த்தியது
என்றைக்கும் உனக்காக வரும் காற்று..

| | 1 - கருத்துரை

நீ கடவுளா ?



விரலின் கீழ் நுனியில் சிக்கிக்கொண்டிருந்த
மோதிரத்தில் பொறிக்கப்பட்டிருந்த
அந்த நான்கெழுத்து வார்த்தை
தினமும் என்னை எனக்கே
ஞாபகப்படுத்திக்கொண்டிருந்ததது - ஏனென்றால்
அது - நானும் ஒரு நாள் அதுவாக மாறி
தீர்கதரிசனத்தை தரும்போது
எழும் கேள்விக்கான விடை - நீ கடவுளா ?

| | 6 - கருத்துரை

அது - எவனுக்கும் புரியாது !!


(2) இட்ட வரியை இரண்டு முறை படிக்கவும்

 தேடிகொண்டிருக்கும்போது கிடைத்தது
தேடுவது அல்ல தேடியது - என்று
கிடைத்ததை பார்க்கும் போது தெரிந்தது(2)
தெரிந்தது அல்ல தெரியாதது - என்று
தெரிந்ததை சொல்லும் போது புரிந்தது(2)
புரிவது அல்ல புரியாதது - என்று
புரிந்ததை பார்க்கும் போது தெளிந்தது(2)
தேடிக்கிடைத்தை தெரிந்து சொல்லும்போது
அது - எவனுக்கும் புரியாது என்று !!